இந்திரஜித், இராவணன்
இந்திரஜித், இராவணன் PT
கதைகள்

மேகநாதன், கும்பகர்ணன் பேச்சை கேட்ட இராவணனுக்கு நடந்தது என்ன? இராமாயணம் உணர்த்தும் நீதி இதுதான்!

Jayashree A

ஜானகியை தேடிக்கொண்டு வந்த அனுமன், அசோகவனத்தில் அவரை கண்டதும் துயருற்றார். இராவணனை எச்சரிக்கவும் செய்தார். கோபமுற்ற இராவணன் அனுமனின் வாலில் தீ மூட்ட ஆணையிட்டார். வாலில் பற்றிய நெருப்பைக்கொண்டு அசோகவனத்தை தவிர லங்காபுரி முழுவதையும் தீக்கிரையாக்கினார் அனுமன். இதில் இராவணனின் அரண்மனையும் பற்றி எரிந்தது.

என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இராவணனும், அவனை சார்ந்தவர்களும் வேரொரு இடத்தில் தங்கினர். இந்த இடைப்பட்ட காலத்தில் லங்காபுரியை மீண்டும் தேவதட்சன் அனுமானித்தார். மீண்டும் லங்கை புதுப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ‘ராமரின் பக்கம் இருக்கின்ற ஒரேயொரு குரங்கே, இப்படி இலங்கையை எரித்து விட்டதே... அப்படியென்றால் ராமருடன் போர் தொடுத்தால் நான் தோல்வியை தழுவிடுவேனே?’ என்று நினைத்த இராவணன், தனக்கு வேண்டியவர்களுடன் இணைந்து ராமனனின் பலத்தை தெரிந்துக்கொள்ள மந்திராலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் வயது மூத்தவரான மாலியவான், “இராவணா, ஸ்ரீராமன் நீ நினைப்பது போல் சாதாரணவன் அல்ல. மகாவிஷ்ணுவின் அவதாரம், லட்சுமி தேவியின் அவதாரமான ஜானகியை விட்டுவிடு” என்று ராவணனுக்கு அறிவுரை கூறினார். ஆனால் ராவணன் அவரின் பேச்சை உதாசீனம் செய்தார்.

அடுத்ததாக விபீஷணன், “அண்ணா உனக்கு வேதவதியை நியாபகம் உள்ளதா? ‘ஒரு பெண்ணினால்தான் உன் உயிர் போகும்’ என்று அவள் இறக்கும் தருவாயில் உனக்கு சாபமளித்தாள். அவள் கூறியதைப்போல் நீ ஜானகியை சிறைப்பிடித்து வைத்திருக்கிறாய். இது தவறு. நம் முன்னோர்களின் இரண்ய கசிபு கதை என்ன என்பதையும் நாம் அறிவோம். ஆகவே தமயனே, நீ தவறு செய்வதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார். அதையும் இராவணன் காதில் வாங்கவில்லை.

அடுத்து இராவணனின் தமயனான கும்பகர்ணன் “இராவணா, நீ ஆசைப்படுவது அடுத்தவரின் மனைவியை. இது தவறு. இருப்பினும் போர் என்று வந்தால் நம்மை வீழ்த்த அந்த தேவர்களாலும் முடியாது. அப்படி இருக்கையில் இந்த அற்ப மானிடரால் நம்மை என்ன செய்துவிட முடியும்? மானிடரை நாம் வெற்றிக்கொள்வது சுலபம். ஆகையால் உனக்காக நான் போர் புரிகிறேன்” என்று கூறினார். கும்பகர்ணனின் வார்த்தை இராவணனுக்கு தெம்பை அளித்தது.

அடுத்ததாக ராவணனின் மூத்த மனைவியான மண்டோதரி. இவரது பிள்ளை மேகநாதன் என்று அழைக்கப்படும் இந்திரஜித். அதிபலசாலியாக பிறந்த இந்திரஜித், தேவர்களின் தலைவனான இந்திரனையே வென்றவர். மேகங்களில் தன்னை மறைத்துக்கொள்ளும் திறமை பெற்றவனாக திகழ்ந்ததால் இந்திரஜித், மேகநாதன் எனவும் அழைக்கப்பட்டார். தந்தையை தெய்வமாக வணங்கியவர். ஆகையால் தனது தந்தை செய்வதை நியாயப்படுத்தினார்.

“தந்தையே... நான் இந்திரனையே வென்றவன். என்னிடத்தில் பாசுபதம், பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம் இருக்கிறதே... பிறகு எதற்கு கவலை? தைரியமாக போருக்கு தயாராகுங்கள். அந்த மானிடர்கள் கூட்டத்தை நான் ஒரு கை பார்க்கிறேன்” என்று கூறவும் இராவணனுக்கு அதீத பலம் வந்தது. எவரையும் வெற்றிக்கொள்ளும் இந்திரஜித்தையும், இராவணனையும் நம்பி போர்புரிய தயாரானார்.

ஒரு அவையில் அதர்மத்தை நியாயமாக்கி அதற்கு உதவி புரிவதற்கு பலசாலிகள் நால்வர் இருந்ததால் இராவணன் ராமருடன் போர்புரிய ஆயத்தமானார். இச்சபையில், இந்திரஜித்தும் கும்பகர்ணனும், இராவணனின் தவறை அவருக்கு உணர்த்தி போர் உதவிகள் செய்யாமல் இருந்திருந்தால் இராவணன் உயிர் நீத்திருக்கமாட்டார்.

கதை உணர்த்தும் நீதி: அதர்மத்துக்கு ஆதரவாக செயல்படும் ஒருவர், பலசாலிகளின் துணையை தன்னோடு கொண்டிருந்தாலும்கூட அவரால் இறுதியில் வெற்றிபெற முடியாது!