கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவருடன் சேர்த்து 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். பதவியேற்ற பின்னர் கேரள தலைமைச் செயலகம் சென்ற அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மகளிருக்கு நிதிச்சுதந்திரம் அளிக்கும் வகையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக டெல்லியில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசுப்பேருந்துகளில் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், கேரளத்திலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தசூழலில் தான், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஎம் தலைமையிலான இடது முண்ணனியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கிறது. வி.டி. சதீசன் நேற்று முதல்வராக பதவியேற்ற நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து, அடுத்த மாதம் ஜூன் 15 -ம் தேதி முதல் கேரள அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணத் திட்டம் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, முதியவர்களுக்கென சிறப்புத் துறையை உருவாக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கேரளத்தில் முதியோருக்கு ஒரு சிறப்புத் துறையை உருவாக்குவது இதுவே முதன்முறையாகும்.