மேற்கு வங்கத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஆளும் திரிணாமுல் அரசு, பாஜக எம்பி ஒருவருக்கு அம்மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கெளரவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டில் ஆளும் திரிணாமுல் அரசு மற்றும் அதை அகற்ற பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பாஜக மாநிலங்களவை எம்பியான அனந்த மகாராஜ் என்று அழைக்கப்படும் நாகேன் ராய்க்கு அம்மாநில அரசு பங்கா விபூஷண் விருதை வழங்கி கெளரவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான இந்த பங்கா விபூஷண் விருது, கலை, கலாசாரம், இலக்கியம், பொது நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ராஜ்பன்ஷி மொழி மற்றும் கலாசாரத்தைப் பரப்புவதில் அனந்த மகாராஜின் பங்கிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இவ்விழாவில், முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு 25 ஆளுமைகளுக்கு இவ்விருதினை வழங்கினார். அதில் அனந்த மகாராஜும் ஒருவர்.
நாகேன் ராய் 2023ஆம் ஆண்டு பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆவார். ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அவர் அனந்த மகாராஜ் என்று பரவலாக அறியப்படுகிறார். ’மகாராஜ்’ என்ற பட்டம் அவருக்கு சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சுமார் 3.3 மில்லியன் உள்ளனர். வடக்கு வங்காள மாவட்டங்கள் மற்றும் அசாமின் சில பகுதிகளைப் பிரித்து தனி கூச் பெஹார் மாநிலத்திற்காக ராய் போராடி வருகிறார். ராஜ்பன்ஷி சமூகத்திற்குள் அவரது செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து மேற்கு வங்க அரசு இந்த விருதை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காரணம், இச்சமூகம் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆளும் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும், அதேநேரத்தில், அங்கு பாஜக வலுவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாகேன் ராய் ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமாகக் கருதப்பட்டார். பின்னர், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். 2024ஆம் ஆண்டில், மம்தா பானர்ஜி அவரது வீட்டிற்குச் சென்றார், இது குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில், மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்படுத்தப்படுவது குறித்து ராய் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.