பாகிஸ்தான் - இந்தியா X
இந்தியா

ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம் ஆனது எப்படி? பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14 ஏன்?

இந்தியாவின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 தேர்வு செய்யப்பட்டது ஏன்? பாகிஸ்தான் ஏன் ஆகஸ்ட் 14இல் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது? என்பது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்த பின், 1947 மார்ச் மாதம் மவுண்ட்பேட்டன் பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகப் பொறுப்பேற்றார். இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்ற 1948 ஜூன் வரை அவகாசம் இருந்தபோதிலும், நாட்டில் வெடித்த மதக் கலவரங்கள், சிக்கலான அரசியல் சூழல் மற்றும் தீவிரமடைந்த பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை காரணமாக, 1947 ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே அதிகார மாற்றத்தை நிகழ்த்த மவுண்ட்பேட்டன் முடிவெடுத்தார்.

மவுண்ட் பேட்டன்

இந்தியாவுக்கு அதிகாரத்தைக் கைமாற்ற அவர் ஆகஸ்ட் 15ஆம் தேதியைத் தேர்வு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை உள்ளடக்கிய நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த நாள் என்பதாலேயே ஆகஸ்ட் 15-ஐ அவர் தேர்வு செய்தார். பிற்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்த வரலாற்று ஆவணப் பதிவில் அவர் இதைத் தெரிவித்தார். இதன்பின், ஜூலை 4 அன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'இந்திய சுதந்திர மசோதா' அடுத்த 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 15இல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு சுதந்திர நாடுகளின் உருவாக்கத்துக்கு அந்த சட்டம் வழிவகுத்தது.

மவுண்ட் பேட்டன் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், பாகிஸ்தானுக்கான அதிகார மாற்றம் ஆகஸ்ட் 14 அன்றே கராச்சியில் நடைபெற்றது. இதனால் தான் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஐச் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறது. அதிகார மாற்றத்தை பிரிட்டிஷ் அரசு, அவசர அவசரமாகச் செயல்படுத்தியதால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது வரலாறு காணாத வன்முறை வெடித்து ரத்த ஆறு ஓடியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நிதானமான திட்டமிடல் இருந்திருந்தால், கொடூரமான வன்முறையையும் உயிர்ப்பலிகளையும் குறைத்திருக்க முடியும் என்பதே அவர்களின் பார்வையாகும்