மம்தா, சுவேந்து Chat Gpt
இந்தியா

மேற்கு வங்க Exit Poll முடிவுகள்.. வெளியிட மறுக்கும் 'ஆக்சிஸ் மை இந்தியா'.. பின்னணி என்ன?

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

திவ்யா தங்கராஜ்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, சேகரிக்கப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை திருப்திகரமாக இல்லாததால், முடிவுகளை வெளியிட வேண்டாம் என ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுக்க ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மேற்கு வங்கத்திலும் இரண்டாவதுகட்ட தேர்தல் ஏப்ரல் 29 உடன் நடந்து முடிந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 2011ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் உள்ளது. 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த முறை பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

இதில், பி.மார்க் நிறுவன கருத்துக்கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 118 - 138, பாஜக கூட்டணி : 150 - 175, மற்றவை : 2 -6 என கணிக்கப்பட்டுள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 117 - 187, பாஜக கூட்டணி : 95 - 110, காங்கிரஸ் : 1 - 3 எனவும், மேட்ரிக் கணிப்புகளின்படி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி : 125 - 140, பாஜக கூட்டணி : 146 - 161, மற்றவை : 6 -10 என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவை பாஜக முன்னிலையில் இருப்பதாகவும் கணித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, சேகரிக்கப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை திருப்திகரமாக இல்லாததால், முடிவுகளை வெளியிட வேண்டாம் என ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆய்வுக்காக அணுகப்பட்ட வாக்காளர்களில் சுமார் 70% பேர் எந்தப் பதிலும் சொல்ல மறுத்துவிட்டனர். இது வழக்கமான அளவைவிட மிகவும் அதிகம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறத் தயங்குவதால், துல்லியமான கணிப்புகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட தகவல்களில் ஒருதலைப்பட்சமான போக்கு இருக்க வாய்ப்புள்ளதால், இது தேர்தல் முடிவுகளைத் தவறாகக் கணிக்கக்கூடும் என அந்நிறுவனம் அஞ்சுகிறது.

"தவறான அல்லது ஆதாரமற்ற கணிப்புகளை வழங்குவதைவிட, நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முடிவுகளை வெளியிடாமல் இருப்பதே பொறுப்பான செயல்" என்று ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத் தேர்தலில் நிலவும் கடும் போட்டி மற்றும் அங்குள்ள அரசியல் சூழல் காரணமாக வாக்காளர்கள் தங்கள் மனவோட்டத்தை வெளிப்படுத்தத் தயங்குவது இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. மற்ற நிறுவனங்களின் கணிப்புகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. முன்னதாக, இதே நிறுவனம்தான் தமிழ்நாட்டில் விஜயின் தவெக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளின்படி, விஜயின் கட்சி 98 முதல் 120 இடங்களைப் பெற்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு இணையாக இருக்கும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 முதல் 32 இடங்களையும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.