மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் அக்கட்சியின் தலைவரான மம்தாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் பலத்த தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதா ப்ரதா பானர்ஜி தன்னை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகர் ரதீந்திர போஸிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கோரிக்கை கடிதத்தில் தனக்கு 58 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இக்கடிதத்தில் மம்தா பானர்ஜியே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
ஏற்கெனவே சோபன் தேவ் என்பவரை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைத்து அபிஷேக் பானர்ஜி கடிதம் அளித்திருந்த நிலையில், ரிதபிரதாவின் கடிதம் கவனம் பெறுகிறது. அதேநேரத்தில், ரிதா ப்ரதாவை எதிர்க்கட்சி தலைவராக்குமாறு சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதம் செல்லாது என திரிணமுல் காங்கிரஸில் மம்தா ஆதரவு தரப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகள்படி, கட்சி தலைமை சார்பில்தான் எதிர்க்கட்சித் தலைவரை பரிந்துரைக்கும் கடிதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் சார்பில் அல்ல என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த அதிருப்தி எம்எல்ஏக்களைத் திரட்டிய ரிதா ப்ரதா மற்றும் சந்திபன் சாகா ஆகிய இருவருமே இரண்டு நாட்களுக்கு முன்பே அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். அவர்களின் நீக்கக் கடிதங்களும் பொதுவெளியில் உள்ளன என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டு வரும் இந்த அடுத்தடுத்த திருப்பங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உடைகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.