புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளராக அசோக் ஆனந்தை அறிவித்திருந்தது. நீதிமன்ற வழக்கால் தனது எம்எல்ஏ பதவியை இழந்து, மீண்டும் போட்டியிடும் இந்த அசோக் ஆனந்த் பின்னணி குறித்து பார்க்கலாம்.
அசோக் ஆனந்தின் தந்தை ஆனந்தன், புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 1997 முதல் 2006 வரை பொறியாளராக பணியாற்றியவர். முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், பொதுப்பணித் துறை பொறியாளராக பணியாற்றிய காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மகன் அசோக் ஆனந்தையும் இணைந்தது. 2018-ல் இந்த வழக்கில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை புதுச்சேரி கீழமை நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனால், தனது எம்எல்ஏ பதவியை இழந்த அசோக் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அசோக் ஆனந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தேர்தல் தடை நீங்கிய நிலையில், தற்போது தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். ரங்கசாமி, 2011இல் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.