மும்பை கலவரம்
மும்பை கலவரம் புதியதலைமுறை
இந்தியா

ராமர் கோயில் பிராண பிரதிஷ்ட்டையின்போது மும்பையில் வெடித்த கலவரம்! என்ன நடந்தது?

யுவபுருஷ்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிராண பிரதிஷ்ட்டை கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்த நிலையில், நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக சென்றும், பேரணிகளையும் நடத்தினர். அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தேதிகளில் இரு வேறு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

13 பேர் கைது செய்யப்பட்டது எங்கே?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நயா நகர் பகுதியைச் சேர்ந்த மிரா சாலையில், கடந்த 21ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இந்துத்துவா அமைப்பினர் இரவு பேரணி சென்றுள்ளனர். அப்போது இரவு 11 மணியளவில் இஸ்லாமியர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் இந்துத்துவா அமைப்பினர் நுழைந்துள்ளனர். அத்தோடு அவர்கள் ”ஜெய் ஸ்ரீராம்” உள்ளிட்ட ராமர் தொடர்பான வாசகங்களை சொல்லியும் கத்தியதாக தெரிகிறது. அப்போது, போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தியபோதும், இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதனால் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். இதுதொடர்பான எழுந்த புகாரின் பேரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் பதற்றமான சூழல் கட்டுக்குள் வர போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்தான், குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான 15 கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம். ஆண்டாண்டுகாலமாக இருந்த கட்டடங்கள், ஒருநாள் நடந்த வன்முறையில் எழுந்த புகாரின் பேரில் திட்டமிட்டே இடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பனவல் பகுதியில் நடந்தது என்ன?

மிரா சாலை பகுதியில் இரவு நேரத்தில் வன்முறை நடந்த நிலையில், அடுத்தநாள் அதாவது 22ம் தேதி காலை நேரத்தில் பனவல் பகுதியைச் சேர்ந்த கச்சி மொஹல்லா எனும் பகுதியில் மசூதி இருந்த இடத்தில் இளைஞர்கள் ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்களை கூறியபடி, பைக்கில் பேரணி சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட வன்முறை செயல்கள் அரங்கேறியுள்ளன.

இதில் 3 பேர் வெகுவாக காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

வன்முறை எண்ணத்தில் பரவும் வீடியோக்கள்!

பனவல் பகுதி மற்றும் மிரா சாலை பகுதியில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒருவர், கல்லெறிந்தவர்களுக்கு எதிராக இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிகிறது. நல்ல விஷயம்தான், ஒற்றுமையாக இருங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நாம்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவை மேற்கோள் காட்டிய மற்றொரு நபர், ”சமூகவலைதளங்களில் இதுபோன்று வன்முறையை தூண்டும் விதமாக வரும் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் எத்தனை நாட்கள் அமைதியாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மிரா சாலை மற்றும் பனவல் பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரம், பலரிடையே விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.