சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

மம்தா அரசின் திட்டம் | 30 லட்சம் பயனாளிகளை நீக்கிய புதிய பாஜக அரசு!

புதிய அன்னபூர்ணா பண்டார் திட்டம் அல்லது அன்னபூர்ணா யோஜனா, ஜூன் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது.

Prakash J

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைந்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ், தகுதியற்ற 30 லட்சம் பேர் பணப் பலன்களைப் பெற்று வந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக அரசு முதன்முறையாக அமைந்துள்ள நிலையில், அது தேர்தல் அறிக்கையில் அறிக்கப்பட்டுள்ளபடி, ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அதன்படி, புதிய அன்னபூர்ணா பண்டார் திட்டம் அல்லது அன்னபூர்ணா யோஜனா, ஜூன் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது.

மம்தா பானர்ஜி

முன்னதாக, மேற்கு வங்கத்தில் உள்ள பெண்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களாக லக்ஷ்மிர் பந்தர் மற்றும் அன்னபூர்ணா பந்தர் ஆகிய இரண்டு திட்டங்களும் செயல்படுகின்றன. இதற்கு முன்னர் மாதம் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரை வழங்கி வந்த லக்ஷ்மிர் பந்தர் திட்டத்திற்குப் பதிலாக, வரவிருக்கும் அன்னபூர்ணா பந்தர் திட்டம் மாதம் ரூ.3,000 தொகையை வழங்க இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, லட்சுமி பந்தர் திட்டத்தின் கீழ் 2.21 கோடி பெண்கள் நிதியுதவி பெறுகின்றனர். இதில், பொதுப் பிரிவு பெண்கள் மாதம் ரூ.1,500-ம், பட்டியல் சாதி/பழங்குடியினப் பெண்கள் ரூ.1,700-ம் பெறுகின்றனர். இந்த நிலையில், முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் முதன்மைத் திட்டமான லட்சுமி பண்டாரின் சுமார் 30 லட்சம் பயனாளிகள், புதிய அன்னபூர்ணா பண்டார் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரி

இந்த நபர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்கள் அல்லது மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டவர்கள் எனவும், இந்தப் போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், புதிய அன்னபூர்ணா பண்டார் திட்டத்தின்கீழ் அவர்கள் பலன்களைப் பெற மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.