heart attack x page
இந்தியா

தெலங்கானா | பள்ளிக்கு நடந்துசென்ற 10ஆம் வகுப்பு மாணவி.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

தெலங்கானாவில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ஆம் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில்கூட, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரும், குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மணமகனும் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தெலங்கானாவில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ஆம் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டம், ராமரெட்டி மண்டலத்தில் உள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி. 16 வயது நிறைந்த இவர், காமரெட்டியில் தங்கியிருந்தபடி தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், நேற்று பள்ளிக்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது செய்தியறிந்த ஆசிரியர்கள் ஓடிச்சென்று முதலுதவி அளித்துள்ளனர். அதில் எந்தப் பயனும் இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், அங்குள்ளவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மாவட்டத்தில் உள்ள அலிகரின் சிரௌலி கிராமத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் மோஹித் சவுத்ரி (14) வருடாந்திர விளையாட்டு தினப் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது பயிற்சி ஓட்டத்தின் போது மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்தார். தொடர்ந்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது தீக்ஷா என்ற மற்றொரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் இறந்தது.

heart attack

இதுகுறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம். ரப்பானி, "ஆரோக்கியமான ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் இறந்தால், அது திடீர் மாரடைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குழந்தை மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி பற்றி புகார் செய்தால், அவரை உடனடியாக பரிசோதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.