பிரணய் தேஜ் X
இந்தியா

வீட்டுப்பாடம் எழுதாததால் கண்டித்த ஆசிரியர்.. 6 வயது சிறுவன் ம**ம்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை கண்டித்து அடித்ததில், அச்சமடைந்த எல்.கே.ஜி பயிலும் பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஒன் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன் எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற பிரணய், வீட்டுப்பாடத்தைச் செய்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டுப்பாடம் தொடர்பாக ஆசிரியர் சிறுவனை கண்டித்துள்ளார்.

அப்போது, திடீரென சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், பள்ளி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

cctv

இந்தசம்பவம் தொடர்பாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கும் நிலையில், சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் 194வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சம்பத்தப்பட்ட ஆசிரியர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அதில், ஆசிரியர் ஒருவர் சிறுவன் பிரணயை தன்னிடம் இழுத்து கண்டிப்பதுடன், அவரைத் தாக்குவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, சில நொடிகளிலேயே சிறுவன் பிரணய் ஆசிரியர் மீது சரிந்து விழுவது போன்ற காட்சிகளும் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன.

சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆசிரியர் கண்டித்து அடித்ததில் அச்சமடைந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.