14 இடங்களில் மேகவெடிப்பு.. சரிந்த இமயமலை பகுதிகள்.. சின்னாபின்னமான ஜம்மு காஷ்மீர்!
எல் நினோ விளைவு காரணமாக உலகம் முழுவதும் இந்த ஆண்டு இயல்பை விட வானிலையில் தீவிரமான மாற்றம் இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர புயல்களும், பெருவெள்ளங்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் வடமாநிலங்களின் சில முக்கிய இடங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் அதீத மழைபொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அந்த வரிசையில் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இணைந்துள்ளது.
இமயமலையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர மழைப்பொழிவு பதிவான நிலையில், ராஜௌரி (Rajouri) மாவட்டம் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இமயமலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜௌரி மாவட்டத்தின் முக்கிய கட்டடங்களும், வாகனங்களும், குடியிருப்பு வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. பெருந்திரளான மேகங்கள் இமயமலையின் செங்குத்தான மலைப்பகுதிகளில் மோதி ஒரே இடத்தில் குறுகிய நேரத்தில் மழையாக கொட்டித் தீர்த்ததால் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

