விநாயகர் எக்ஸ் தளம்
இந்தியா

நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா.. கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

PT WEB

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகளை இந்தக் கட்டுரை தருகிறது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, மகிழ்ச்சி மற்றும் ஆன்மிகம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பிள்ளையார்பட்டி கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சி, ஆன்மிகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, மதுரை, சென்னை, தென்காசி உள்ளிட்ட நகரங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறுபுறம், பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கண்கவர் மின்விளக்கு அலங்கராத்தால் ஜொலித்தது. இதையொட்டி அந்தக் கோயிலுக்கு பக்தர்கள் குவிந்த வண்ணமுள்ளனர். அங்கு தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து விநாயகரை வழிபட்டனர்.

அதேபோல், வடமாநிலங்களில் பொதுமக்கள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், விநாயகர் முகம் கொண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். அதில், இந்தியாவின் தற்சார்பு உற்பத்தி, நாட்டின் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வாசங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்து, புகைப்படம் எடுத்தனர்.

வடஇந்தியாவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா

மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். திரிபுரா தலைநகர் அகர்தலாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் முதல்வர் மாணிக் சாஹா வழிபாடு நடத்தினார். இதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், பிரதமர் மோடியின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது பலரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. மேற்குவங்க மாநிலத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.