இளம் பெண் மீது தாக்குதல் நடத்தும் நடத்துநர்
இளம் பெண் மீது தாக்குதல் நடத்தும் நடத்துநர்  PT WEB
இந்தியா

கர்நாடகா | கன்னத்தில் அறைந்த பயணி.. ஆத்திரத்தில் நடத்துநர் செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

விமல் ராஜ்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக அக்கட்சி நிறைவேற்றி வருகிறது. அதில் கர்நாடக மாநிலம் முழுவதும் மாநகர பேருந்து மற்றும் புறநகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது.

இளம் பெண்ணை தாக்கும் நடத்துநர்

இந்த பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் கர்நாடக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை நடத்துநரிடம் காட்டி இலவச பயண சீட் பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம்.

இந்த நிலையில், பெங்களூருவில் சமீபத்தில் பிலக்கள்ளி பகுதியிலிருந்து சிவாஜி நகருக்குச் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில், தஞ்சிலா இஸ்மாயில் என்ற இளம்பெண் ஏறியுள்ளார். அப்போது நடத்துநரிடம் அந்த பெண் டிக்கெட் கேட்டபோது, நடத்துநர் டிக்கெட் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர் "ஆதார் அட்டை கொடுங்கள்" என நடத்துநர் கேட்டுள்ளார். இரண்டு ஸ்டாப் கடந்து சென்ற பிறகு மீண்டும் இளம் பெண் பயண சீட் கேட்டுள்ளார். அப்போது மீண்டும் ஆதார் அட்டை கேட்ட நடத்துநர், "ஸ்டேஜ் முடிகிறது, ஆதார் அட்டை காண்பித்து இலவச பயண சீட் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பணம் செலுத்தி பயண சீட் பெற்றுக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண் நடத்துநரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதில் கோபமடைந்த நடத்துநர் இளம் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.