சிங்கங்கள்
சிங்கங்கள் ட்விட்டர்
இந்தியா

’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!

Prakash J

மற்ற மாநில உயிரியல் பூங்காக்களில் இருந்து விலங்குகளைக் கொண்டுவந்து வேறொரு பூங்காக்களில் வளர்ப்பது வாடிக்கை. இதன்மூலம், வனவிலங்குகளுக்கான இனப்பெருக்க திட்டம் வெற்றிகரமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் செபாஜிலா என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ’அக்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு 6 வயதான பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ’மாநிலத்தின் வனத்துறை சிங்கங்களுக்கு பெயர்களை வழங்கி உள்ளது. அதில் 'அக்பர்' என்ற பெயர் உடன் 'சீதா'வை இணைத்தது இந்துக்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது. அதனால், சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 20-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது ஆகும். சிங்கங்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் இந்த இருபெயர்களும் பழைய பூங்காவிலேயே சூட்டப்பட்டது ஆகும். மேற்கு வங்க பூங்காவுக்கு வந்தபிறகு அவைகளுக்கு பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்துத்தான் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.2,900 கோடி அபராதம்.. 3 ஆண்டுகள் தடை.. அடிமேல் அடி வாங்கும் ட்ரம்ப்.. தேர்தலில் பின்னடைவா?