குழந்தை திருமணம் எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி. | மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்.. மனைவியாக்கிய 55 வயது தந்தை!

உத்தரப்பிரதேசத்தில், தனது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை, மகனின் தந்தையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வளர்ந்த பிள்ளைகளுக்குத் திருமணத்தைச் செய்துவைப்பது என்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இதனால் எத்தனை நாட்களானாலும், எவ்வளவு செலவானாலும் அதற்கான முயற்சி எடுத்து பிள்ளைகளுக்கான திருமண கடமையைப் பெற்றோர் முடித்து வைக்கின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில், தனது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை, மகனின் தந்தையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டம் பன்ஸ்நகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷகீல். 55 வயதான இவருக்கு திருமணமாகி ஆறு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று பேரக் குழந்தைகளும் அடக்கம். இந்த நிலையில், அவர் தன்னுடைய 17 வயது மகன் அமானுக்கு அருகில் இருந்த கிராமத்திற்கு பெண் பார்க்கச் சென்றார். இறுதியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 22 வயதுப் பெண்ணுக்கும் அமானுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைக்கப்பட்டது. இதற்கிடையே திருமணத்தை நடத்துவதில் பொருளாதார ரீதியாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லி ஷகீலின் மனைவி ஷபானா உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், ஷகீலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் குறியாய் இருந்துள்ளார். இதுதொடர்பாக, ஷகீல் ஆயிஷாவிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இது, அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகட்டத்தில், இவர்களுடைய நெருக்கம் தொடர்பாக சந்தேகம் எழுந்து, அமான் தந்தையின் செல்போனை ஆராய்ந்துள்ளார். அதில் சந்தேகிக்கும் வகையில் மெசேஜ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். எனினும், உன் திருமணம் பற்றியது எனக் கூறி சமாளித்துள்ளார். இதற்கிடையே வேலைக்காக அவர் டெல்லி சென்றுள்ளார். பின்னர் சில தினங்கள் கழித்து அவர், தனது மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை போனில் அழைத்து, ஆயிஷாவை தாம் மணந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

திருமணம்

இதைக்கேட்ட ஷாகீல் மனைவி ஷபானா கடும் அதிர்ச்சி அடைந்ததுள்ளார். ”மருமகளாக எங்கள் வீட்டிற்கு வர வேண்டியவள், தன்னுடைய வாழ்க்கையில் பங்கு போட்டுவிட்டாளே” என வேதனை அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.