suicide
suicide file image
இந்தியா

உத்தரப்பிரதேசம் | மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

யுவபுருஷ்

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பேர்லி பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் சிங் (45). இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 45 வயதான இவருக்கு 40 வயதில் மனைவி மற்றும் 12, 4 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு இவர்களது குடும்பத்தில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் அழைத்த சக மருத்துவர்களும், போன் அழைப்பை எடுக்கவில்லை என்று போலீஸில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், அருணின் வீட்டுக்குச் சென்றுபார்த்தப்போது, கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. அப்போது கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், மருத்துவர் உட்பட 4 பேரும் சடலமாக இருந்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், மனஉளைச்சலில் இருந்த மருத்துவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை மோசமான முறையில் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் தொடர்ந்து, அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடல்களை மீட்ட போலீஸார் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.