உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அக்கோவிலுக்குச் சென்று நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் காணிக்கைகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்தசூழலில் தான், ராமர் கோவிலின் கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த முன்னாள் நிர்வாகியான மகிபால் சிங், ராமர் கோவில் நீண்ட காலமாக முறைகேடு நடந்து வருவதாகவும், அது குறித்து புகார் அளித்ததாலேயே தனது பதவி பறிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ராமர் கோவில் முறைகேடு விவகாரம் அம்மாநிலத்தில் பேசுபொருளானது. மேலும், இந்த விவாகரம் குறித்து பேசியிருந்த முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ராமர் நிதி மேலாண்மையில், பல கோடி மாயமாகியிருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மாநில அரசு மௌனம் காக்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தநிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திருந்தது.
அதன்படி, அயோத்தி ராமர் கோவிலின் உண்டியல் காணிக்கை பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அயோத்திக்கு அருகிலுள்ள ருதௌலியில் நடைபெற்ற அரசு விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராமர் கோவில் அறக்கட்டளையின் வேண்டுகோளின் பேரில் தான் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விசாரணை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.
மேலும், அயோத்தி இன்று உலகளாவிய ஆன்மீகம் மற்றும் வளர்ச்சியின் மையமாக மாறிவருவது எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அயோத்தியின் நற்பெயரைக் கெடுக்க நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தசிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.