கேரள அரசியலில் கம்யூனிசத்தின் வேர்களை 1957 தேர்தல் உறுதிப்படுத்தியது; ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் அரசு உலகின் முதல் ஜனநாயக கம்யூனிச ஆட்சியாக வரலாறு படைத்தது. இதுவரை 15 தேர்தல்களில் இடதுசாரிகள் 9 முறை வென்றுள்ளனர். 11 ஆண்டுகள் ஆட்சி செய்த ஈ.கே. நாயனார் நீண்டகால முதல்வர்; அவரை 10 ஆண்டு ஆட்சியுடன் பினராயி விஜயன் தொடர்ந்து வருகிறார்.
திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகள் இணைந்து 1957இல் கேரளா என்ற பெயரில் புதிய மாநிலமாக உருவெடுத்தது. 1957இல் நடந்த தேர்தலில் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு என்ற பெருமையையும் நம்பூதிரிபாட்டின் அரசு பெற்றது.
கேரளா இதுவரை 15 சட்டமன்ற தேர்தல்களை கண்டுள்ளது. இதில் இடதுசாரி கட்சிகள் 9 முறையும் காங்கிரஸ் கூட்டணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 69 ஆண்டுகளில் 12 முதல்வர்களை கேரளா கண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஈ. கே.நாயனார் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 11 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில் தற்போதுள்ள பினராயி விஜயன் 10 ஆண்டு ஆட்சியுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக அதிக ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில், 2021இல் 99 இடங்களை வென்ற இடது ஜனநாயக முன்னணி (LDF), கேரளா இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியான மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 2021இல் 41 இடங்களுடன் பலவீனமடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதன் வளர்ந்து வரும் இருப்பைப் பயன்படுத்தி தன்னை ஒரு தீர்க்கமான மூன்றாவது சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. ஏற்கெனவே தற்போதைய கேரள அரசு, ஒருசில ஊழல்களால் கறைபட்டுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. அது, 2026 தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
மேலும், பீகார் வெற்றி பாஜகவின் கேரளா பார்வையை மாற்றியுள்ளது. முக்கியமாக சிறுபான்மை மக்கள் விஷயத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். கேரளா சிறுபான்மை மக்களுக்கு பாஜக மீது தவறான பிம்பம் உள்ளது. அது தற்போது மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாகக் கொடி நாட்டியுள்ள பாஜக, அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் கேரளா தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.