போரட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்
போரட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் PT WEB
இந்தியா

தெலங்கானா | பெண் அதிகாரியின் ஆடையை இழுத்த நபர்கள்; விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்

விமல் ராஜ்

தெலங்கானா மாநிலம், நாகர்கர்நூல் அருகே உள்ள அச்சம்பேட்டை விவசாய விலைப் பொருள் மார்க்கெட்டிற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சுமார் 10 டன் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலக்கடலைக்கான அதிகபட்ச விற்பனை விலை குவிண்டால் ஒன்றுக்கு 7,060க்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 4,816க்கும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில், விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலக்கடலைகளைக் கையில் கூட எடுத்துப் பார்க்காமல் வியாபாரிகள் குவின்டால் ஒன்றுக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்க முன் வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் “அரசு அதிகாரிகள் வியாபாரிகளுடன் ரகசிய கூட்டணி அமைத்துச் செயல்படுவதால், எங்களுக்குச் சரியான விலையைக் கொடுக்காமல் வியாபாரிகள் எங்களை ஏமாற்றுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து அங்குள்ள அலுவலகத்தை உடைத்து அங்கிருந்த விவசாய விளைபொருள் மார்க்கெட் கமிட்டி தலைவி அருணா என்பவரின் சேலையைப் பிடித்து தரதரவென்று வெளியில் இழுத்து வந்தனர் சிலர். வெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலக்கடலையை அவர் தலை மீது அள்ளிப்போட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பின்னர் அருணாவை அங்கிருந்த சாலை சந்திப்பு வரை இழுத்துச் சென்று சாலை நடுவே அமர வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மார்க்கெட் கமிட்டி தலைவி அருணாவைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.