தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய், முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் முக்கியக் கோரிக்கைகளை மனுவாக அவர் பிரதமர் மோடியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார். இந்த டெல்லி பயணத்தின்போது முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல்வர் விஜய் இறுதிவரை இவர்களை சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடனிருந்தனர். இதன்மூலம் கடந்த டெல்லி பயணத்தின்போது எழுந்த சர்ச்சைகளுக்கு இந்த முறை முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.