உச்ச நீதிமன்றம் Pt web
இந்தியா

இனி 3 மதத்தினர் மட்டும்தான் பட்டியல் சாதி அந்தஸ்து கோர முடியும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

இந்து, சீக்கிய, பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் பட்டியல் சாதி அந்தஸ்து கோர முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Prakash J

இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்திற்கு மாறும் ஒருவர், பட்டியல் சாதி (SC) அந்தஸ்து பெறத் தகுதி பெறமாட்டார் என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், கிறிஸ்தவ மதத்தில் இணைந்து போதகராகச் செயல்பட்டு வருகிறார். இவரை, அக்கலா ராமிரெட்டி மற்றும் பிறர் தாக்கியதாகவும், மேலும் அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், சாதி அடிப்படையில் தன்னைத் திட்டியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அவர்கள் மீது பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் ஆனந்த வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கில், ஆனந்த் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாலும், ஒரு போதகராக தீவிரமாகப் பணியாற்றி வருவதாலும், பட்டியல் சாதியினருக்கு மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் பாதுகாப்புகளுக்கு அவர் தகுதியற்றவர் என்று எதிர்தரப்பினர் வாதிட்டனர்.

உச்ச நீதிமன்றம்

விசாரணை முடிந்து, அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஆனந்த் குற்றச்சாட்டுகளை ரத்துசெய்யக் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார். புகார்தாரர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் தனது பட்டியல் சாதி அந்தஸ்தை இழந்துவிட்டார் என்றும், அதனால் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கோர முடியாது என ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தை தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர், பட்டியல் சாதி (SC) சமூகத்தைச் சேர்ந்தவராகத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட முடியாது என்ற ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தினர்.

மேலும், இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்திற்கு மாறும் ஒருவர், பட்டியல் சாதி (SC) அந்தஸ்து பெறத் தகுதி பெறமாட்டார் என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றும் நபர்களுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்து கோரும் உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.