Student protests in Bihar ANI
இந்தியா

'நாய்கள் குரைக்கத்தான் செய்யும்' - மாணவர்களை கொச்சையாக பேசிய அதிகாரி.. கொந்தளித்த மாணவர்கள்!

மாணவர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசிய அதிகாரியால் பீகாரில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Praveen Joshva L

BBSC தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேஷ் குமார் சிங், முறைகேடுகளை எதிர்த்து பேசும் மாணவர்களை ‘யானை சந்தைக்குச் செல்லும் போது நாய்கள் குரைக்கும்’ என்று அவமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாணவர்கள் கடும் எதிர்ப்பில் களமிறங்க, பீகார் அரசு அவரை பணியிடை நீக்கம் செய்தது. பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வில் பல ஆண்டுக்காலமாக முறைகேடு புகார்கள் எழுந்த சூழலில், இந்த விவகாரத்தை முன்வைத்து டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்திய சூழலில் அதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவின. இதன் காரணமாக இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி தீவிரம் அடைந்தது.

இறுதியில் மாணவர் போராட்டங்களுக்கு பணிந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் பீகாரில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அம்மாநில மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

குறிப்பாக BBSC என அழைக்கப்படும் பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளால் 70வது BBSC தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்வுகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை நீக்க வேண்டும் ஆகியவை மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த சூழலில், சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் குறித்து பேசிய BBSC அமைப்பின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியான ராஜேஷ் குமார் சிங் (Rajesh Kumar Singh), முறைகேடுகள் தொடர்பாக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்றும், ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரு பழமொழி உண்டு 'யானை சந்தைக்குச் செல்லும்போது ஆயிரம் நாய்கள் குரைக்கத்தான் செய்யும்' (Haathi chale bazaar, kutte bhonke hazaar)" என்றும் கூறினார்.

ஒரு அதிகாரி மாணவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்து பீகாரில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் உச்சம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பீகார் அரசு ராஜேஷ் குமார் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை தடுக்க அவர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.