Petrol pt web
இந்தியா

ஈரான் அமெரிக்க போர்.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஷெல்.. எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணத அளவில் ஷெல் எரிவாயு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

Premkumar S

ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்திருப்பதன் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவி வரும் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு காரணமாக உணவங்களில் விற்கப்படும் உணவுகளின் விலை அதிகரித்திருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வு

அதேசமயம், போர் சூழலலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேல் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஷெல் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தியிருக்கிறது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.40 உயர்ந்து 119.50 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, டீசலின் விலை ரூ.25 உயர்ந்து 123 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, நயாரா எனர்ஜி எரிபொருள் நிறுவனம் பெட்ரோ டீசல் விலைகளை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது ஷெல் நிறுவனமும் விலை உயர்த்தியிருக்கிறது. அதேசமயம், மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பெட்ரோல், டீசல் விலை என்பது உயர்த்தப்படவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்ப்பதற்கு விலையை அதிகரித்திருக்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனங்கள் நோக்கி செல்வார்கள் என்பதால், அந்நிறுவங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.