டெல்லியில் பகல் நேரத்திலும் பல இடங்கள் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றன. குறைந்தபட்சமாக மேற்கு டெல்லியின் பூசாவில் 3.5 டிகிரி செல்சியசும், அயநகரில் 4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால், டெல்லி முழுவதும் உள்ள தங்குமிடங்களில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும் அதேவேளையில், டெல்லியில் காற்றின் மாசுபாடும் கணிசமாக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி கிராசிங் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் 350 முதல் 397 வரை பதிவாகியது. டெல்லியின் பிற பகுதிகளான துவாரகா, நேரு நகர் மற்றும் ரோகிணி உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 370 என்ற அளவில் இருக்கிறது.
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. குர்தாஸ்பூரில் இரண்டு டிகிரி பதான்கோட்டில் 3.5 டிகிரி செல்சியஸ், அமிர்தசரசில் 3.9 டிகிரி செல்சியஸ் வரை குளிரின் தாக்கம் இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதேபோல், ராஜஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. ஃபதேபூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஹரியானா மாநிலத்திலும் கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.