தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம் ஃபேஸ்புக்
இந்தியா

தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில் மேகா நிறுவனத்திற்கு 2வது இடம்!

Jayashree A

தேர்தல் நிதிப்பத்திரம் என்பது, இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் அல்லது நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிகளின் கிளைகளின் மூலமாக, தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வரைமுறை.

இதன் மூலம் ரூ.1000, ரூ. 10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என பல வகைகளில் நிதிப்பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 2018 ஜனவரி 29 ஆம் தேதி அரசால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று அறிவித்ததோடு, ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு சென்ற நிதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஸ்டேட் வங்கியும் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதில், கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் குழுமத்திற்கு சொந்தமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளார் பட்டியலில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மேகா இஞ்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) நிறுவனமானது இரண்டாவது நன்கொடையாளர் இடத்தில் இருக்கிறது.

மேகா குழுமம் என அறியப்படும் இந்நிறுவனம் ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2023 வரை அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவும், பிற நிறுவனங்கள் வாயிலாகவும் ரூ.1232 கோடி கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேகா குழுமம் , ரூபாய் 966 கோடியை MIEL நிறுவனத்தின் மூலமாகவும் , ரூபாய் 220 கோடியை வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கோ லிமிடெட் (Western UP Power transmission) மூலமாகவும் ரூபாய் 40 கோடியை எஸ் இ பி சி பவர் (SEPC power) ஈவி டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் (EV trans pvt ltd) மூலமாக 6 கோடி ரூபாயையும் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகன் பாமிரெட்டி பிச்சி ரெட்டி. இவரது மருமகன் புரிதிபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி இவர் MIEL நடத்திவருகிறார்

ஆரம்பத்தில் MIEL ஹைதராபாத்தின் ஃபேப்ரிகேஷன் மையமானது சிறிய நகராட்சி நீர் திட்டங்களுக்கு குழாய்களை நிர்ணயிக்கும் பணியை செய்யும் ஒரு சிறிய ஃபேப்ரிகேஷன் யூனிட்டாக செயல்பட்டு வந்தது. பின் படிப்படியாக வளர்ந்து 2006 ல் இந்தியாவின் ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்தது குறிப்பிடதக்கது.