அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கெனத் தனி கழிப்பறை வசதி மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் மாதவிடாய் சுகாதார கொள்கையை 6 முதல் 12 வரையிலான பள்ளிகள் அனைத்திலும் அமல்படுத்த வேண்டும் எனவும் நாப்கின்களை இலவசமாக வழங்கத் தவறும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், “மாணவிகளுக்குத் தனி கழிப்பறைகள் இல்லாததும், மாதவிடாய் காலத் தேவையான நாப்கின்கள் போன்ற பொருட்கள் கிடைக்காததும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21A-ன் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'கல்வி உரிமை'யை மீறும் செயலாகும். மேலும், மாதவிடாய் சுகாதார மேலாண்மை வசதிகள் இல்லாதது ஒரு பெண் குழந்தையின் கண்ணியத்தைக் குலைக்கிறது. அவமானம், புறக்கணிப்பு அல்லது தவிர்க்கக்கூடிய துன்பங்கள் இன்றி வாழ்வதே உண்மையான கண்ணியம். ஒரு தனிநபரின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் உள்ளது. அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள 'வாழும் உரிமை' என்பது மாதவிடாய் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை அடைய இச்சுகாதார நடவடிக்கைகள் அவசியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பைப் பெற, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களும் வசதிகளும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தத் தீர்ப்பு வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, அது ஒரு சமூக விழிப்புணர்வுக்கான அறைகூவல்” எனவும் நீதிபதிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, "இந்தத் தீர்ப்பு வகுப்பறையில் உதவி கேட்கத் தயங்கும் மாணவிகளுக்கானது. உதவி செய்ய விரும்பியும் வசதிகள் இல்லாத ஆசிரியர்களுக்கானது. தனது உடல் ஒரு 'சுமை' என்று நினைத்து பள்ளிக்குச் செல்லாமல் தவிர்க்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: இதில் உன்னுடைய தவறு எதுவுமில்லை. இந்த வார்த்தைகள் நீதிமன்றத்தை தாண்டிச் சென்று சமுதாயத்தின் மனசாட்சியைத் தொட வேண்டும். உரிமைகளை வெறும் காகிதத்தில் மட்டும் வைக்காமல், அவற்றை நிஜமாக்குவதில் உள்ள சமூக மற்றும் கட்டமைப்புத் தடைகளை நீக்க வேண்டியது அரசின் கட்டாயக் கடமை” என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.