உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் தெரிவித்த "கரப்பான் பூச்சி" என்ற கருத்தை மையமாக வைத்து உருவான "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற நையாண்டி இயக்கத்திற்கு எதிராகவும், போலி வழக்கறிஞர்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த மே 15- ம் தேதி நடைபெற்ற ஒரு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு கருத்தைத் தெரிவித்தார். போலிப் பட்டங்கள் மற்றும் முறையற்ற தகுதிகளுடன் வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைபவர்கள் குறித்துப் பேசுகையில், "வேலையில்லாத, தகுதியற்ற இளைஞர்கள் சிலர் கரப்பான் பூச்சிகளைப் போல சமூக ஊடகங்களிலும், ஆர்டிஐ செயல்பாடுகளிலும் சமூக ஒட்டுண்ணிகளாக மாறி வருகின்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர், இது வேலையில்லாத இந்திய இளைஞர்களைக் குறித்த பொதுவான கருத்து அல்ல என்றும், போலிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறித்தது என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்தக் கருத்தை முன்வைத்து அமெரிக்காவில் வசிக்கும் அபிஜீத் டிப்கே என்பவரால் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற நையாண்டி இயக்கம் சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டது.
இந்தசூழலில் தான், காக்ரோஜ் ஜனதா கட்சி மீது சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜா சௌத்ரி தாக்கல் செய்த மனுவில், இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் சட்டப் படிப்பு சான்றிதழ்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்ற உரையாடல்களை நையாண்டி செய்தும், மீம்ஸ்கள் மூலமும் சிதைத்து வெளியிடுவது நீதித்துறையின் மதிப்பைச் சீர்குலைக்கிறது. நீதிமன்ற விவாதங்களைச் சுயலாபத்திற்காகவும், வணிக ரீதியாகவும் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இந்த மனுவை முன்வைத்த வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி, "அவர்கள் நீதித்துறையின் பிம்பத்தை சீர்குலைக்கிறார்கள்," என்று வாதிட்டார்.
அதற்குத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு "இதை இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக்கொள்ளாதீர்கள். இதில் தற்போதைக்கு எந்த ஒரு பெரிய அவசரமும் இல்லை. உரிய நேரத்தில் இதைப் பரிசீலிப்போம்." எனத் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்த "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் குறித்து நையாண்டி செய்யும் நோக்கில் இது தொடங்கப்பட்டாலும், நீதிமன்றத்தின் வார்த்தைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கும், நீதிமன்றத்தின் மாண்பிற்கும் இடையிலான ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.