மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து உட்கட்சி மோதல்களால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 பிரிவுகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம், அக்கட்சியின் பெயரையும், அதன் அதிகாரப்பூர்வ 'பூக்கள் மற்றும் புல்' (Flowers and Grass) சின்னத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தச்சூழலில் தான், மம்தா பானர்ஜி மற்றும் ரிதப்ரதா பானா்ஜி தலைமையிலான இரு பிரிவுகளுக்கும் தனித்தனி கட்சிப் பெயர் மற்றும் சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில், அடுத்த மாதம் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாக, 4 வது முறையாக வென்று ஆட்சியமைக்குமா? என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தான், 208 தொகுதிகளில் வென்று மேற்குவங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. அக்கட்சியின் சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.
அதேசமயம், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே வென்று எதிர்க்கட்சியானது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக மம்தா பானர்ஜி தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தரப்பு என இரு பிரிவாக திரிணாமுல் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதில், மம்தா தரப்பிற்கு வெறும் 15 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அக்கட்சியின் 20 மக்களவை உறுப்பினர்களும் என்.டி.ஏ. கூட்டணிக்கு மாற்றுக் கட்சிக்கு சென்றதுடன், என்.டி.ஏ கூட்டணி ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச்சூழலில் தான், 3 முறை முதல்வராக இருந்த மம்தா ”கட்சியை நான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து புதிதாகக் கட்டி எழுப்புவேன்" என தெரிவித்திருக்கிறார். எனினும், ரிதப்ரதா பானர்ஜி தரப்பு, ”தங்களுக்கே கட்சியின் சின்னம் மற்றும் பெயர் வேண்டும்” என தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968'-ன் பத்தி 15-ன் கீழ், இரு பிரிவினரும் திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை 2அணிகளும் தற்காலிக சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்தும் படி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும், இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான பெயர்களையும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து தலா சின்னங்களையும் தேர்வு செய்து செப்டம்பர் 18-ம் தேதி, அதாவது இன்று காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தாங்களே உண்மையான திரிணமூல் கட்சி என்பதில் உறுதியாக இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, "கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தவாறே" தனது மாற்றுப் பெயர் மற்றும் சின்ன விருப்பங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. மற்றொரு அணியும், தங்களது விருப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தான், மம்தா தலைமையிலான பிரிவுக்கு "கால்பந்து " சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அணி "மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்" என்கிற பெயரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, ரிதாப்ரதா தரப்புக்கு, ‘ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும் அஞ்சல் உறை" சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வாங்க மாநிலத்தில் வரும், அக்டோபர் 6-ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த தற்காலிக முடிவை எடுத்திருக்கிறது. அதேசமயம், உட்கட்சி விவகாரம் குறித்த இறுதித் தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, "முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும், ஒரே பாணியில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து, ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன; பின்னர் அதன் தேர்தல் சின்னத்தைப் பறித்துக் கொள்கின்றன” என விமர்சித்திருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.