suresh gopi
suresh gopi file image
இந்தியா

கேள்வி கெட்ட பெண் பத்திரிகையாளர் தோளில் கைவைத்த பாஜக முன்னாள் MP.. புகார் அளித்த உடன் ட்விஸ்ட்..!

யுவபுருஷ்

மலையாளம், தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்திருப்பவர் சுரேஷ் கோபி. அரசியல்வாதியாகவும் அறியப்படும் இவர், பாஜக சார்பில் நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுரேஷ் கோபியிடம் கேள்வி கேட்டார்.

அப்போது, சிரித்தபடியே அந்த பெண் பத்திரிகையாளரின் தோள் மீது கைவைத்தபடி பேசத்தொடங்கினார் சுரேஷ் கோபி. இதனால், அசௌகரியமாக உணர்ந்த பத்திரிகையாளர் தள்ளி போனபோது , அவரை மீண்டும் பிடித்து இழுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், பெண் பத்திரிகையாளர் சுரேஷ் கோபியின் கையை தட்டிவிட்டும், அவர் மீண்டும் கைவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுரேஷ் கோபி இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாஜக நிர்வாகியும், நடிகருமான இவரது இந்த செயல், பணிபுரியும் பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் தரப்பு இதுகுறித்து கூறியபோது, சனிக்கிழமை அதாவது இன்றைய தினம் போலீஸில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சுரேஷ் கோபி.

அதில், “பத்திரிகையாளர் சந்திப்பில், அந்த பெண்ணிடம் நான் மிகவும் அக்கரையுடன் நடந்துகொண்டேன். இதுவரை எப்போதும் பொதுஇடத்தில் நான் தவறாக நடந்துகொண்டதில்லை. இந்த சம்பவத்தில் அந்த பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடத்தையால் அவர் புண்பட்டிருந்தால், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்திப்பு பேசிய சுரேஷ் கோபி, “என்னை வழிமறித்து நின்ற அந்த பெண் பத்திரிகையாளரை ஒருபுறமாக நகர்த்த முற்பட்டதிலேயே நான் சோர்ந்துவிட்டேன். ஒரு அப்பாவாக நான் அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று தொலைபேசியில் பலமுறை அழைத்தும், அவர் அழைப்பை எடுக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.