வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், 'ஒரு நபர், ஒரு வாக்கு' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை உறுதி செய்யவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி இன்று புதிய அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். ‘வாக்காளர் உரிமைப் பயணம்’ என்ற பெயரில் பீகாரில் அவர் புதிய பரப்புரையை தொடங்குகிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 16 நாட்களில் பீகாரில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கி, 1,300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பை பாதுகாக்க மக்களை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும், இந்தப் பயணம், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நிறுத்த உதவும் எனவும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிஹார் வாக்காளர் சீர்த்திருந்த நடவடிக்கை, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு... இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் செய்தியாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் சந்தேகங்களில் தேர்தல் ஆணையம் எத்தகைய விளக்கத்தை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.