QR code  AI -PT
இந்தியா

போலி மருந்துகளை கண்டறிய QR Code கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி!

போலியான புற்றுநோய் மருந்துகள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து நோயாளியின் கைகளுக்கு வரும் வரை மருந்துகளை கண்காணிக்கும் புதிய முறை அமலுக்கு வருகிறது.

PT WEB

இந்தியாவில் தரமற்ற, போலி மருந்துகளை ஒழிக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உயிர்காக்கும் vaccine, cancer சிகிச்சை மருந்துகள், ஆன்டிபயாடிக், மனநல மருந்துகள் உள்ளிட்ட முக்கிய மருந்துகளின் பேக்கேஜில் QR/பார்கோடு கட்டாயம். இதை ஸ்கேன் செய்து தயாரிப்பு குறியீடு, பேட்ச் எண், உற்பத்தி-காலாவதி தேதி, உரிம எண் போன்ற விவரங்களை நோயாளிகள் நேரடியாக சரிபார்க்க முடியும்.

செய்தியாளர்: M. மீரா

இந்தியாவில் தரமற்ற மருந்து மற்றும் போலி மருந்துகளை முற்றிலும் தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயிர்காக்கும் தடுப்பூசிகள், ஆன்டிபயாடிக்குகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரும் மனநல மருந்துகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய மருந்துகளிலும் QR கோடு அல்லது பார்கோடு அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, இந்தியாவில் விற்பனையாகும் மிக முக்கியமான டாப் 300 மருந்து பிராண்டுகளுக்கு மட்டுமே இந்த QR கோடு விதிமுறை கட்டாயமாக இருந்தது.

QR code

இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தும் வகையில், 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது பேக்கேஜில் இந்த டிஜிட்டல் QR குறியீட்டைப் பதிக்க வேண்டும். ஒருவேளை, அங்கு இடம் பற்றாக்குறை இருந்தால் வெளிப்புற அட்டையில் இதனை பதிக்கலாம். இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த மருந்தின் தனித்துவமான தயாரிப்புக் குறியீடு, பிராண்ட் பெயர், தயாரிப்பாளர் விபரங்கள், பேட்ச் எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் மற்றும் உரிம எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நுகர்வோர்கள் உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

QR code

இந்த மாற்றத்திற்கான காலக்கெடுவை இரண்டு கட்டங்களாகப் பிரித்து வழங்கியுள்ளது மத்திய அரசு. முதற்கட்டமாக QR கோடு விதிமுறைகள் வரும் ஜூலை 1, 2027 முதல் அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் மனநல மருந்துகளுக்கு கட்டாயமாக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக QR கோடு ஜூலை 1, 2028 முதல் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளன.