பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் கர்ஷங்கரின் சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரூப் (33). இந்த நிலையில், ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் வியாபாரியைக் கொலை செய்த வழக்கில், ராம் சரூப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார், “கொலை செய்யப்பட்ட அனைவரையும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல்ரீதியாக ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர்களை கொலைசெய்து அவர்களிடமிருக்கும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்துள்ளன. அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாகப் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதிவைத்துச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், “அவர், இதுவரை கடந்த 18 மாதங்களில் 11 கொலைகள் செய்துள்ளார். இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன. கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப், போதைப்பொருளுக்கு அடிமையானவர். குடிபோதையில், குற்றங்களைச் செய்வதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ராம் சரூப்க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தன் பால் ஈர்ப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவரை நாங்கள் கைது செய்துள்ளோம். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.