Unknown drone AI
இந்தியா

இரவில் பறந்த மர்ம ட்ரோன்கள்.. பாகிஸ்தான் போடும் Plan? விமானங்கள் திடீர் நிறுத்தம்!

அமிர்தசரஸ் விமான நிலையம் அருகே சந்தேக ட்ரோன்கள் தென்பட்டதால் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீகுரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையம் அருகே, செப்டம்பர் 6ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் போன்ற பறக்கும் பொருட்கள் தென்பட்டதால், பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரவு 10 மணியளவில், விமான நிலைய ஓடுபாதையின் அருகே 2 முதல் 4 ட்ரோன்களைப் போன்ற பறக்கும் பொருட்கள் தென்பட்டதாக பிரபல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அவை ராஜாலா கிராமம் அமைந்துள்ள திசையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பொருட்கள், ஓடுபாதை மற்றும் விமான நிலையத்தின் முக்கியப் பகுதிகளுக்கு மேலே சில நிமிடங்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Unknown drone

இதைக் கவனித்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்தது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தைக் கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக நிறுத்தியது. மத்திய பாதுகாப்பு அமைப்புகள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் அனிருத் குமார், 'விமான நிலையத்தின் வெளிப்புற பாதுகாப்பு சுவருக்கு அப்பால், செயல்பாட்டு பகுதிக்கு அருகே பல ட்ரோன் போன்ற பொருட்கள் பறந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு அமைப்புகள் சூழ்நிலையை ஆய்வு செய்தன' என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் பல விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கோலாலம்பூரில் இருந்து வந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டது. மும்பை மற்றும் டெல்லியில் இருந்து வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் சண்டிகருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 3 உள்நாட்டு விமானங்களின் சேவைகளும் தாமதமாகின.

Unknown drone

பாதுகாப்புக் குழுக்கள் விமான நிலையப் பகுதியில் சோதனை நடத்தி, வான்வெளியில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, விமானச் சேவைகள் வழக்கம்போல் தொடங்கின. இதற்கிடையே, பறக்கும் பொருட்கள் எங்கிருந்து வந்தன, அவை உண்மையில் ட்ரோன்களா என்பது குறித்து போலீசார் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. ராஜாலா உள்ளிட்ட சுற்றுவட்டார எல்லைக் கிராமங்களிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

அமிர்தசரஸ் விமான நிலையம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருப்பதால், இந்தச் சம்பவத்தை பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமானதாக கருதின. பஞ்சாபில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசுவதற்காக பாகிஸ்தான் எல்லை தாண்டி ட்ரோன்களை பயன்படுத்திய சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. எனவே, ட்ரோன் போன்ற இந்தப் பறக்கும் பொருட்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.