மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு pt desk
இந்தியா

புதுச்சேரி | மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - 13 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது. மீனவர்களை விடுதலை செய்ய உறவினர்கள் கண்ணீர் மல்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அப்துல் அலீம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 26ம் தேதி காரைக்கால் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதையடுத்து காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 13 மீனவர்கள் வழக்கம் போல் நேற்று இரவு கோடியகரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

Fisherman

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி மீனவர்களை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், படகில் இருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கிளிஞ்சல்மேடு பகுதி மீனவ பெண்கள் ஒன்று கூடி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்தும் மீனவர்களையும் படகை விடுவிக்குமாறு ஒப்பாரி வைத்து கண்ணீர் மல்க மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.