p s raghavan
p s raghavan PT
இந்தியா

மேற்குவங்க முன்னாள் தலைமை செயலர் பி.எஸ் ராகவன் சென்னையில் காலமானார்!

யுவபுருஷ்

சென்னை பூந்தமல்லியில் பிறந்தவர் பி.எஸ் ராகவன். கடந்த 1952-ம் ஆண்டு மேற்குவங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.எஸ்.ராகவன், மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 1961ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று அப்போதைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.

டெல்லியில் மத்திய உணவுத்துறை செயலாளராக இருந்த நேரத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக அரசியை ஒதுக்கினார் பி.எஸ் ராகவன். இதுவே சத்துணவு திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு சற்று உதவியாக இருந்தது. அவர் கடந்த 1987ன் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் மீண்டும் சென்னையில் குடியேறினார் பி.எஸ் ராகவன். மேலும், தி இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கும் ஆலோசகராக பல ஆண்டுகளாக பணியாற்றினார். மேலும், பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழிலும் பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், ‘நேரு முதல் நேற்று வரை’ என்ற பிரபலமான நூலை படைத்து கவனம் ஈர்த்தார். பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை, அடையாறு நேரு நகர் 2வது தெருவில் வசித்து வந்த இவர் நேற்று காலமானார். இவரது உயிரிழப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சௌந்தரராஜன் தமது இரங்கல் செய்தியில், “மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ்.ராகவன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.