பிரதமர் மோடி fb
இந்தியா

விமானம் விபத்திற்குள்ளான அகமதாபாத்திற்கு செல்லும் பிரதமர் மோடி!

இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான அகமதாபாத்திற்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டுள்ளது . லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான், போயிங் 787- 8 ட்ரீம்லைனர் விமானத்தின் பயணத்திட்டம். இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர் என, மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்தனர்.

பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகலைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர். விமானி சுமித் சபர்வால், ஏற்கனவே 8200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். துணை விமானி கிளைவ் குந்தர், 1100 மணி நேரம் விமானங்களை இயக்கியவர்.

இந்தநிலையில், 1.38 மணிக்கு பயணத்தைத் தொடங்கிய விமானம். மேலே எழுவதிலேயே திணறியுள்ளது. டேக் ஆஃப் ஆகும் முன்பே தடுமாறிய விமானம், சில நொடிகளில் நிலைகுலைந்து போயுள்ளது. விமானம் 425 அடி உயரத்தைக் கடந்தபோது தான் கடைசியாக சிக்னல் கிடைத்தது.

625 அடி உயரத்தில் இருந்து, தலைகீழாக, மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த பயங்கரவிபத்தில், 242 பேரில், 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் என்ற ஒரு நபர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான அகமதாபாத்திற்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை அவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களையும், அவர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகமதாபாத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

“அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அங்கு பணியாற்றும் அமைச்சர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.