பிஹார் தேர்தலில் பிரபல தேர்தல் வியூவதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் படுதோல்வி தவெகவுக்கு ஒரு பாடமாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பிஹார் தேர்தலில் பிரபல தேர்தல் வியூவதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் படுதோல்வி தவெகவுக்கு ஒரு பாடமாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கூறி வரும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் சவால்படியே அரசியலை விட்டு விலகுவாரா என்ற குரல்களும் வலுத்து வருகிறது. தேர்தல் வியூகத்தில் டாப் என அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க போன்ற பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார். இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதலைமைச்சராக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே.
ஏன், தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைவதற்கு அவரது தேர்தல் வியூகமே காரணம். இதற்காக, பல கோடி ரூபாயை ஊதியமாகவும் பெற்றுக்கொண்டார். பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், ஒரு கட்டத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து ஒதுங்கி, சமூக ஆர்வலராக மாறி, ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் 2022-ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. கட்சியை வளர்ப்பதற்காக சொந்தமாக வியூகம் வகுத்த அவர், பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் மக்களின் ஆதரவு பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த நிலையில் உற்சாகமானார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடும் முடிவை அவர் எடுத்தார். மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது. வேட்பாளர்கள் தேர்வின்போதே பார்த்து.. பார்த்து.. ஒவ்வொருவரையும் பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்தார். "இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்த அவர், "150 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் அது தோல்வியாகவே கருதப்படும்" என்றும் கூறினார்.
இறுதிக்கட்டத்தில், பெரும் நம்பிக்கையோடு அவர் இருந்த நேரத்தில்தான், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சிக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரையே கிடைக்கும் என்றும் கூறினர். கருத்து கணிப்பு முடிவுகளால் வெகுண்டெழுந்த பிரசாந்த் கிஷோர், "நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகுவேன்" என்று சவால்விட்டார். ஆனால், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்பில் வெளிவந்ததுபோலவே அமைந்துவிட்டன.
பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்து கணிப்பில் கூறப்பட்ட ஒன்றிரண்டு தொகுதிகள் கூட கிடைக்காமல் போய்விடும் நிலமையில் தான் இருக்கிறது. 5 மணி நிலவரப்படி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் டாப்பாக இருந்த பிரசாந்த் கிஷோர், தேர்தலில் மண்ணை கவ்விவிட்டார் என்பதே இதிலிருந்து தெரிகிறது.
மேலும், சவாலின்போது தான் அளித்த வாக்குறுதியான, அரசியலை விட்டு விலகுவதாக கூறியதை நிறைவேற்றுவாரா? என்பதே அரசியல் வட்டாரங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், தவெகவின் முதலாம் ஆண்டு விழா கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற போது தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர், சிறப்பு விருத்தினராக விஜயுடன் மேடையேறினார். அப்போது பேசிய பிரஷாந்த் கிஷோர் தமிழ்நாட்டில் விஜய் 2026ல் வெற்றி பெறுவார் என்றும் நானும் அந்த சமயத்தில் பிரபலமான பிஹாரியாக மாறுவேன் என்று தெரிவித்தார். அந்த சமயத்தில் இந்த பேச்சு படுவைரலானது. அதுமட்டுமில்லாமல், விஜய் PK-வை மேடையேற்றியது கடுமையான விமரசனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது.
பிறகு தற்போது, பீகார் தேர்தலில் ஓரு தொகுதிகளில் கூட JSP முன்னைலையில் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டுவருகிறது. இதேபோன்ற சவால் தான் தவெகவிற்கும் காத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் கூறுகின்றனர் . திமுகவும், அதிமுகவும் பல ஆண்டு கால அமைப்பு ரீதியான பலத்தையும், விசுவாசமான வாக்காளர் தளத்தையும் கொண்டுள்ளன. எனவே, தவெக தனது முதல் பெரிய தேர்தலை எதிர்கொள்ளும்போது பீகார் தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கையாகவும் பாடமாகவும் பார்க்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். அதே போல் ஒவ்வொரு தேர்தல் களமும் வெவ்வேறு மாதிரியான களத்தையும் சூழலையும் கொண்டுள்ளதால் முடிவு என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.