அரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் ?

அரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் ?
அரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் ?

தேர்தல் அரசியலில் வெல்வதற்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிப்பது, மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை பெற முயல்வது என்பதெல்லாம் நம்பியார் கால டெக்னிக் என்றாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை அனுகுவதைவிட கார்ப்பரேட் நிறுவனங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. எதையும் விளம்பரம் செய்தால் விற்றுவிடலாம் என்பதே தற்போதைய அரசியல்வாதிகளின் நிலை. இதற்காக உதவுவதற்கென்று, அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கென்று சில கார்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஓ.எம்.ஜி, ஐபேக் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத் தக்கவை. இம்மாதிரியான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அரசியல் பார்வை என்றெல்லாம் எதுவும் கிடையாது. இவர்களைப் பொறுத்தவரை அரசியல்கட்சிகள் தங்களது வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து இவை ஆலோசனைகளை வழங்கும்.

இதில் நம்பர் ஒன்னாக இருப்பது ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி”. இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரஷாந்த் கிஷோர். இவர் வகுத்துக் கொடுக்கும் வியூகத்தின் அடிப்படையில் தான் மோடி முதல் கமல்ஹாசன் வரை தேர்தலை சந்திக்கிறார்கள். இவர்கள் அரசியல் கட்சிகளின் ப்ரமோசனுக்காக வாங்கும் கட்டணம் குறைந்தது 150 கோடி ரூபாய்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர் ஒரு பொது சுகாதார ஆய்வாளர். ஐக்கியநாடுகள் சபையில் எட்டு வருடங்கள் பணியாற்றிவிட்டுத் திரும்பிய இவர் தற்போது அரசியல் வியூக நிபுணராக அறியப்படுகிறார். 2012’ல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது ஊடகங்களில் அதிகம் அடிபட்டது இவரது பெயர். 2012 - மோடிக்கு எதிராக வீசிய அலையை வெற்றியின் திசையில் மடைமாற்றியது இந்த பிரஷாந்த் கிஷோர் தான்.

குஜராத்தில் மோடி மூன்றாவது முறையாக முதல்வர் ஆக பிரஷாந்த் கொடுத்த ஆலோசனைதான் காரணம். அதன் பிறகு 2014’ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றது. இதற்கு பின் நின்றது பிரஷாந்த்தின் ஐபேக். அப்போது முதல் மோடிக்கு நெருக்கமான நபராக வலம் வந்தார் இந்த பிரஷாந்த் கிஷோர்.

முந்தைய சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே வென்று பலவீனமான நிலையில் இருந்தது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். அது 2019 தேர்தலில் ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். இதற்கு பின் செயல்பட்டது பிரஷாந்த்தின் ப்ரமோசன் ஐடியாக்கள்.

ஜெகன் மோகன் ரெட்டியின் பலத்தை அதிகரிக்கும் யுத்திகளைச் சொன்னதோடு மட்டுமல்லாமல். சந்திரபாபு நாயுடுவின் புகழை காலி செய்யும் ஐடியாக்களையும் ஐபேக் நிறுவனம் சிறப்பாக செய்தது. ‘பை பை பாபு’, ’உங்களை நாங்கள் நம்பமாட்டோம் சந்திரபாபு’., போன்ற விளம்பர வாசகங்களை பிரபலப்படுத்தி எதிராளியை அடித்து ஆடியது இவரது நிறுவனம். மேலும் கிராமப்புறங்களில் மிகவும் பலவீனமாக இருந்த ஜெகனின் கட்சியை பலப்படுத்த ’ராவாலி ஜெகன், காவாலி ஜெகன்’ என்ற பிரச்சார பாடலை உருவாக்கி அதனை கோடிக்கணக்கானோர் பார்க்கும் படி வைரல் ஆக்கி கெத்து காட்டியது. பலனை தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அனுபவிக்கிறார்.

மம்தா பேனர்ஜியே தனது இமேஜை பூஸ்ட் செய்ய பிரஷாந்த் கிஷோரை நாடியிருக்கிறார். பிரஷாந்த்திற்கு கட்சி சார்பு என்றெல்லாம் இல்லை அவரைப் பொறுத்தவரை கட்சிகள் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். இவ்வகையில் 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் நிதீஷ்குமாருக்கு  ஆதரவாக வேலை செய்தார் பிரஷாந்த் இதில் நிதீஷ் குமார் வெற்றிபெற்றார். மகிழ்ச்சியடைந்த நிதீஷ் குமார் பிரஷாந்த்தை தனது கட்சியின் துணைத்தலைவராக அறிவிக்கும் அளவிற்கு போனார்.

மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 5% வாக்குகளைப் பெற்றது. அடுத்து இக்கட்சி எதிர்கொள்ளவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கமல்ஹாசன் பிரஷாந்த் கிஷோரை நாடியிருக்கிறார். தமக்கு முன்பாக கமல் பிரஷாந்த்தை அனுகியதில் அதிமுக’விற்கு சற்று அதிருப்தி என்றும் சொல்லப்பட்டது.

கமல்ஹாசனுடன் விவாதித்த பிறகு பிரஷாந்த் குழு கள ஆய்வில் இறங்கியது. அது அளித்த அறிக்கையின்படி மக்கள் நீதி மையம் இலக்கை அடைய இன்னும் 90% தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. 2021 தேர்தலில் கமல் நினைப்பது எல்லாம் சாத்தியமில்லை. வேண்டுமானால் 2026’ல் பார்க்கலாம் என்று சொன்னார்களாம். மேலும் பிரஷாந்த் கொடுத்த ஐடியாக்களின் படியே மக்கள் நீதி மய்யமானது பிறகு மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகளை நியமித்தது.

பிரஷாந்த் கிஷோர் போட்ட அரசியல் ஸ்கெட்ச் ஒரு முறை மிஸ்ஸானது. 2017 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் பணியாற்றினார். ஆனால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்கச் சொல்லி அவர் சொன்னதாகவும் அதனை மேலிடம் மறுத்தாகவும் சொல்லப்பட்டது. இதுவும் கூட தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிறகு அதிமுக நிர்வாக கூட்டத்தில் பேசிய எடப்பாடி ”நாம் எவ்வளவோ நலத்திட்டங்கள் அறிவித்தும் நம்மால் வெற்றிப்பெற முடியவில்லை. நம்முடைய ஐடி விங்’கின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.” என பேசியுள்ளார். இந்நிலையில் 2021’ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிவியூகம் வகுக்க பிரஷாந்த் கிஷோரை பயன்படுத்தப் போவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் பிரச்சார வியூகங்களை இதுவரை ஓ.எம்.ஜி நிறுவனம் தான் கவனித்து வருகிறது. என்றாலும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரஷாந்த் கிஷோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவது இழுபறியாகவே இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ரஜினி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 2021-ல் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினி முதல்வர் ஆவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் கிஷோரை ரஜினி சந்தித்துள்ளார் என்ற ஒரு தகவல் பரவுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அரசியல்வாதியோ சினிமா பிரபலமோ அல்லாத ஒருவர் இந்திய அரசியலை இயக்கும் இந்தப் போக்கை நிச்சயம் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதமுடியாது., என்றாலும் சமகால அரசியலில் இவை எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விக்ரம் நடித்த சாமி படத்தில் வரும் பெருமாள் பிச்சை போன்ற கதாபாத்திரங்கள் பலர் நிஜ வாழ்விலும் உண்டு என்பதை தான் பிரஷாந்த் கிஷோர் போன்ற நபர்கள் மூலம் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com