பிரஜ்வல் ரேவண்ணா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் , கடந்த 2024-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார்.
இந்த சிறைச்சாலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் அறையில் ஆண்ட்ராய்டு செல்போன், சார்ஜர், பென் டிரைவ் மற்றும் பாக்கெட் நோட்டுப் புத்தகம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், சிறைக் கைதிகளுக்கான சீருடையை அணியாமல், சாதாரண உடையில் சிறையில் இருந்து வந்ததும், அந்த செல்போன் மூலம் வெளிநபர்களுடன் உரையாடியதுடன், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி செயலிகளைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக்குள் தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் புழக்கத்தில் இருந்தது மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட உதவி சிறைக் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறைக் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு எவ்வித விஐபி சலுகைகளும் வழங்கப்படாது என்றும், சிறைக்குள் இதுபோன்ற விதிமீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், சாதாரண உடையுடன் சிறையில் இருந்து தொலைபேசியில் பிரஜ்வல் ரேவண்ணா பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர