”ஜந்தர் மந்தர் சீசன் 2; விரைவில் தொடங்கும்” - அபிஜித் திப்கே அறிவிப்பு!!
நீட் வினாத்தாள் கசிவுக்கு முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில், தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை கடந்த, 2026 ஜூலை 25 அன்று ராஜினாமா செய்தார். அதன்பிறகு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துக்களை பகடி செய்யும் விதமாக ஆன்லைனில் அபிஜித் திப்கே என்பவரால் உருவாக்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சியின் முதல் களப்போராட்டமே வெற்றிகரமாக அமைந்த நிலையில், அந்த அமைப்பின் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்கும் என பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச்சூழலில் தான், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, ’ஜந்தர் மந்தர் சீசன் 2’ விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய அபிஜித், இன்ஸ்டாகிராமில் பலரும் 'ஜந்தர் மந்தர்' போராட்டத்தின் 2-வது கட்டம் (Season 2) எப்போது தொடங்கும் எனக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். விரைவில் ஜந்தர் மந்தர் போராட்டத்தின் 2-வது கட்ட நடவடிக்கை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவேந்திர மஹதோ தலைமையில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்திற்கு CJP முழு ஆதரவு தெரிவிக்கிறது.தேவேந்திர மஹதோ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்தப் போராட்டத்திற்குத் தங்களது டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் குழுக்கள் முழுமையான ஆதரவை வழங்கும்.விளம்பரத்திற்காக அங்கு செல்லாமல், போராட்டத்தைப் பலப்படுத்துவதே CJP-இன் நோக்கம்” எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

