பிரதமர் மோடி pt web
இந்தியா

இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக மணிப்பூர் செல்கிறார் பிரதமர்! பலப்படுத்தப்படும் பாதுகாப்புகள்

கலவரம் நடந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப்பிறகு.. வரும் 13 ஆம்தேதி பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார்.

PT WEB

கலவரம் நடந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு - இன்னும் சரியாக கிட்டத்தட்ட 865 நாட்களுக்குப் பிறகு - வரும் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் போது ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்கிறார்.

2023 மே மாதம் மணிப்பூர் மாநிலமே கலவரத்தால் கொந்தளித்தது. குக்கி மற்றும் மெய்தி இனத்தவரிடையே மூண்ட கலவரத்தில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர், மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வந்தன.

மணிப்பூர் கலவரம்

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார். இந்த பயணத்தின்போது குக்கி பழங்குடிகள் பெரும்பான்மையாக உள்ள சுரச்சந்த்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ. 7300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மெய்தி மக்கள் அதிகம் வாழும் தலைநகர் இம்பாலில் ரூ.1200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப்பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இம்பாலில் உள்ள காங்லா கோட்டை மற்றும் சூரசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் பெரிய அளவிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில்தான் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதல் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சூரசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க வருவோர் சாவி, பேனா, தண்ணீர் பாட்டில்கள், பை, கைக்குட்டை, குடை, லைட்டர், தீப்பெட்டி, கூரிய முனையுள்ள எந்த பொருட்களையும் கொண்டுவரக்கூடாது என்று மணிப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் கூட்டத்திற்கு அழைத்து வரப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மணிப்பூர் வருவது மாநிலத்துக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடியது என்று மணிப்பூரின் ஒரே மாநிலங்களவை உறுப்பினரான Leishemba Sanajaoba தெரிவித்துள்ளார். ஏற்கனவே கலவரங்கள் நடந்த வரலாறு கொண்ட மணிப்பூரில், இதுபோன்ற கடினமான தருணங்களில் மக்களின் குரல்களை கேட்க எந்த பிரதமரும் வந்ததில்லை. மோடிதான் கடினமான தருணத்தில் மணிப்பூர் வரும் முதல் பிரதமர் என்று மணிப்பூர் எம்.பி கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரதமரின் வருகையையொட்டி, இம்பால் மற்றும் சுரச்சந்த்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இம்பாலில் 237 ஏக்கர் பரப்பிலான காங்லா கோட்டையிலும், சுரச்சந்த்பூர் அமைதி மைதானத்திலும் மத்திய படைகள்,காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மேலாண்மைப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் சுரச்சந்த்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டம் நடைபெறும் அமைதி மைதானத்துக்குச் செல்லும் பாதை முழுவதும் மூங்கில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முதலமைச்சர் பைரன்சிங் ராஜினாமா செய்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.