பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) காலமானது இசையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மதிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எனப் போற்றப்பட்ட அவர், ஆறு தசாப்தங்களாக 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி பல தலைமுறைகளை மயக்கியவர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல் தெரிவித்து, காலத்தால் அழியாத அவரது இசைச் சுவடுகளைப் பாராட்டினர்.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவு, இசையுலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் இசைக்குயில் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இந்த மூத்த கலைஞர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது சிறப்பான இசைப் பயணத்தில், பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்குத் தனது குரலை வழங்கியுள்ளார். காலமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகிக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி X தளத்தில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அம்மா அவர்களின் மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது பல்வேறு மொழிகளில் பாடல்கள் பல தலைமுறைகளாகப் பிரபலமாக இருந்தன. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் இணையற்ற அருளுடனும் பன்முகத் திறனுடனும் குரல் கொடுத்தவர். அவரது இன்னிசை இனி வரும் காலங்களிலும் கேட்போரை மயக்கும்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு X தளத்தில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாகத் திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.