மோடி ராய்ட்டர்ஸ்
இந்தியா

வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக மணிப்பூர் செல்லும் பிரதமர்.. காங்கிரஸ் விமர்சனம்!

மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Prakash J

மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மணிப்பூர் செல்லும் மோடி

பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்கிறார். முதலில் மிசோரம் செல்லும் அவர், 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், சைராங்-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சைராங்- கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் சைராங்-கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, மணிப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு பல்துறை அங்காடியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். மணிப்பூரில் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரம், வன்முறைக்குப் பிறகு பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி
இப்போது பிரதமர் அங்கு செல்வது நல்ல விஷயம்தான்.
ராகுல் காந்தி

மணிப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு அசாம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அத்துடன் புதிய சாலைகள், பாலங்கள், மருத்துவக் கல்லூரிகள் என 18 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வரும் 15ஆம் தேதி மேற்குவங்கத்தில் நடக்கும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பீகார் செல்கிறார். அங்கு தேசிய மக்கானா வாரியத்தைத் தொடங்கி வைப்பதுடன், புர்னியா விமான நிலையத்தையும் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். மேலும், பீகாரில் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மோடி மணிப்பூர் பயணம்.. காங்கிரஸ் விமர்சனம்!

மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் செல்வதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஜுனாகாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பிரச்னை நீண்டகாலமாக தொடர்வதாக சுட்டிக்காட்டினார். இப்போது பிரதமர் அங்கு செல்வது நல்ல விஷயம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி
பிரதமரின் இப்பயணம் எந்தப் பயனையும் தராது என்றும் இது சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே.
அசோக் கெலாட்

அதேநேரத்தில், பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் ஒரு கேலிக்கூத்தாகவே முடியப்போகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமரின் 3 அல்லது 4 மணி நேர மணிப்பூர் பயணம் அங்குள்ள மக்களுக்கு அமைதியையோ அல்லது நல்லிணக்கத்தையோ தராது என்றும் அது ஒரு கேலிக்கூத்தாகவே முடியும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் இப்பயணம் எந்தப் பயனையும் தராது என்றும் இது சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பிரதமர் 2 ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருக்கவேண்டும் என்றும் இப்போது மிகவும் தாமதமாக மணிப்பூருக்கு செல்வதாகவும் கெலாட் விமர்சித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு மணிப்பூரில் வெடித்த வன்முறை

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் பதவி விலகினார். பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அது, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.