PM Cares நிதி அரசுடையதா, தனியார் அமைப்பைச் சார்ந்ததா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், PM Cares அமைப்பின் பின்னணி குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவ 1948-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதில் உள்ள நிதிப் பேரிடர் போன்ற சூழ்நிலைகளின்போது அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டின்போது ஏற்பட்ட கொரோனா பேரிடர் உலகையே புரட்டிப்போட்டதுபோல, இந்தியாவையும் புரட்டிப் போட்டது. இந்தச் சூழலில் அவசரகாலச் சூழல்களைக் கையாள PM CARES என்ற பெயரில் பொது அறக்கட்டளை உருவாக்கப்பட்ட நிலையில், இதனை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, இதில் பங்காளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெருமுதலாளிகள் என லட்சக்கணக்கானோர் இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்தனர். அதோடு, அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பலரும் தங்கள் ஒருநாள் சம்பளத்தையும் இதற்கு வழங்கினர். இப்படி பெறப்பட்ட PM CARES நிதி, கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப் பயன்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
பிரதமரின் பெயரில், அரசின் இலச்சினை மற்றும் அரசின் gov.in என்ற இணையதள முகவரியை PM Cares பயன்படுத்தியதால் இது அரசின் அறக்கட்டளை என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வியின்போது, இது அரசுக்கு சொந்தமான அமைப்பு அல்ல என்று மத்திய அரசு கூறியது.
மேலும் இது ஓர் அரசு அமைப்பு கிடையாது என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதன் விவரங்களைக் கேட்க முடியாது என்றும் மத்திய அரசு பதிலளித்தது. இது பெரும் அரசியல் விவாதங்களை எழுப்பிவரும் நிலையில், PM Cares குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
PM Cares அறக்கட்டளை, அரசின் நிறுவனம் கிடையாது என்றாலும், இந்திய நாட்டின் பிரதமரே இந்த அமைப்பின் தலைவராக செயல்படுவார். மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் இந்த அமைப்பின் அறங்காவலர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
PM CARES அமைப்புக்கு பிரதமர் தலைவராகவும், மூத்த அமைச்சர்கள் அறங்காவலர்களாகவும் இருப்பதால், இதற்குப் பிரதமரின் பெயரையும், அரசின் சின்னத்தையும் பயன்படுத்த மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளதாகவும், பொது நலன் கருதி இத்தகைய அனுமதிகள் வழங்கப்படுகின்றன என்றும் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும், இது பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மூலமாகவே நிர்வகிக்கப்படுவதோடு, இதன் செயல்பாடு பொதுச் சேவை சார்ந்ததாக இருப்பதால், gov.in என்ற இணையதள முகவரி உள்ளிட்ட தனது உள்கட்டமைப்பை அரசு இதற்கு வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், இது அரசின் அமைப்பு கிடையாது என்பதால், தனியார் தணிக்கையாளர் மூலமே PM CARES நிதி தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.