நாடாளுமன்றம் ஒத்திவைப்பு Pt web
இந்தியா

CJP போராட்டம்.. எதிர்க்கட்சிகள் அமளி.. 2 நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!!

கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தின் போது இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் 2வது நாளாக இன்று அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Premkumar S

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தசூழலில் தான், கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100 மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், டெல்லியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

இதற்கிடையில் தான், இளைஞர்களின் போராட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்தசூழலில் தான், 2-வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. எனினும், இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி-கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், 12 வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 12 மணிக்கும் கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி எம்.பி-கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் 2 நாட்களும் முடங்கியிருக்கிறது.

CJP-க்கு ஆதரவாக ராகுல்காந்தி

இதற்கிடையில், போராட்டத்தில் காயமடைந்த இளைஞர்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்திருந்த நிலையில், தற்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்காகாந்தி உள்ளிட்ட காங்கிரஸார் நாடாளுமன்றத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

விரைவில் புதிய தலைமுறையில் புதிய தொடர்கள்!

உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.