நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் மர்ம நபர் ஒருவரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டதில் கடுமையாக காயம் அடைந்தார். காவல்துறையினரின் கெடுபிடிகள் நிறைந்த பகுதியில், அதிலும் அடுக்குமாடி குடியிருப்பில் 12ஆவது தளத்தில் வசிக்கும் சைஃப் அலிகான் மர்மநபரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கத்தியால் குத்தப்பட்டதில், முதுகுத்தண்டில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதுகில் இன்னும் ஒரு மில்லி மீட்டர் கத்தி ஆழமாக இறங்கி இருந்தால் சைஃப் அலிகானின் உயிருக்கே பெரும் ஆபத்தினை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் ஐசியுவில் இருந்தாலும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு தினங்களுக்குள் அவர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் எப்படி நடந்தது வீட்டில் இருந்தவர்கள் கூறுவது என்ன என்பன போன்ற விவரங்கள் எல்லாம் காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் தம்பதியின் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் செவிலித்தாய்தான் முதலில் மர்ம நபரைப் பார்த்தது. அவர்களது இளைய மகனான ஜெஹாங்கீர் அறையில் மர்மநபர் முதலில் காணப்பட்டுள்ளார். முதலில் கரீனா கபூர்தான் குழந்தையுடன் இருப்பதாக நினைத்த செவிலித்தாய் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்து மீண்டும் அறைக்கு வந்து பார்த்துள்ளார். வேறு ஒரு மர்ம நபர் இருப்பதை உணர்ந்துகொண்ட செவிலித்தாய் அவரைத் தடுக்க முயன்றார். அப்போது, மர்ம நபர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதே அறையில் இருந்த பணிப்பெண் ஒருவர் உடனடியாக சைஃப் அலிகானை எழுப்பி அழைத்துக்கொண்டு வர ஓடியுள்ளார். சத்தம் கேட்டு வெளியே கரீனா கபூரும் சைஃப் அலிகானும் வெளியில் ஒடி வந்துள்ளனர். அப்போது சைஃப் அலிகானை மர்ம நபர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனிடையே வீட்டில் இருந்த மற்றொரு பணிப்பெண் எச்சரிக்கை அலாரத்தை எழுப்ப ஓடிய நிலையில், அதற்குள் மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன தகவல்கள், தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். செவிலித்தாய், பணிப்பெண், கட்டடத்தின் காவலர் போன்றோறது வாக்குமூலங்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மர்மநபரைக் கைது செய்ய 20 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி, பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விடை தெரியாத பல கேள்விகள் இந்த சம்பவம் தொடர்பாக எழுகின்றன. முதலில் மர்மநபர் எப்படி குழந்தைகள் அறைக்குச் சென்றார். குடியிருப்பின் காவலர்கள் யாரும் அவரை ஏன் கண்டுபிடிக்கவில்லை. அலட்சியம் காரணமாக இந்த தவறு நடந்ததா அல்லது காவல்துறையினர் சந்தேகிப்பதுபோல் யாரேனும் மர்ம நபருக்கு உதவியிருக்கலாமா என்ற கேள்வியும் எழுகின்றன.
சைஃப் அலிகானின் வீட்டில் சைஃப் அலிகான் அவரது மனைவி கரீனா கபூர் அவரது இரு மகன்களைத் தாண்டி ஐந்து பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்ம நபருக்கு யாரேனும் உதவியிருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. மர்மநபருக்கு கட்டடத்தின் அமைப்பு நன்றாக தெரிந்திருந்தது எப்படி என்றும் எவ்வாறு அவர் சிசிடிவி கேமராக்களில் இருந்து தப்பினார் என்றும் கேள்விகள் எழுகின்றன.
எதிர்க்கட்சியினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீரழிந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் ஆதித்ய தாக்கரே இந்த சம்பவத்தை ஒட்டி வெளியிட்டிருந்த பதிவில், “இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது. குற்றங்களை தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் இந்த அரசாங்கம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். திரைப்பிரலபலங்கள் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது கண்டனங்களையும் அதிருப்திகளையும் தெரிவித்துள்ளனர். லாரென்ஸ் பிஷ்னாய் கும்பல் சல்மான் கானை மிரட்டியது; ஷாருக் கானுக்கு வந்த டெலிஃபோன் மிரட்டல்; இப்போது சைஃப் அலி கான் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் கொலை வெறித் தாக்குதல் என தொடர் தாக்குதலால் பாலிவுட் கதிகலங்கிப்போயிருக்கிறது.
இந்நிலையில் மகராஷ்டிரா முதலமைச்சர், சைஃப் அலி கான் மீதான தாக்குதல் சம்பவத்தை வைத்து, மும்பையை பாதுகாப்பற்ற இடம் என கூறுவது தவறு எனத் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டின் நிதித் தலைநகரமாக அறியப்படும் மும்பையை பாதுகாப்பான இடமாக மாற்ற அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்களில் பாதுகாப்பான நகரமாக மும்பை விளங்கி வருவதாக தெரிவித்த அவர், சில நேரங்களில் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மை தான் என்றும் குறிப்பிட்டார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிபடுத்துவோம் என்றும் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.