உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிமன்றத் தரவுகளை ஒருங்கிணைக்கும் 'ஒரே வழக்கு, ஒரே தரவு' என்ற ஒருங்கிணைந்த அமைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது ஒரு வழக்கு கீழமை நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கும், பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் வரும்போது, ஒவ்வொரு நிலையிலும் புதிய தரவுகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் தகவல்களில் முரண்பாடுகளும், காலதாமதமும் ஏற்படுகிறது.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஒரு வழக்கு முதல்முறை தாக்கல் செய்யப்படும்போதே அதற்கு ஒரு பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். அந்த ஒரு தரவுத் தொகுப்பே அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படும். காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகிய மூன்றையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைப்பதே இதன் இலக்கு.
இதன் மூலம் வழக்கின் தற்போதைய நிலை, தீர்ப்புகள் மற்றும் ஆவணங்களை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு நொடிகளில் மாற்ற முடியும். வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஒரு வழக்கின் முழு வரலாற்றையும் ஒரே இடத்தில் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது வழிவகை செய்யும். இந்தத் திட்டத்தை அறிவித்துப் பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதித்துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்துவது என்பது வெறும் வசதி அல்ல, அது காலத்தின் கட்டாயம். 'ஒரே வழக்கு, ஒரே தரவு' முறையானது நீதி வழங்குவதில் உள்ள காலதாமதத்தை வெகுவாகக் குறைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
காகிதமில்லா நீதிமன்றங்களை உருவாக்குவதில் இது ஒரு பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. ஆவணங்கள் காணாமல் போவது அல்லது தரவுகளில் பிழை ஏற்படுவது போன்ற புகார்களுக்கு இந்தத் திட்டம் முற்றுப்புள்ளி வைக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்குகளைத் தரம் பிரிக்கவும் இது எதிர்காலத்தில் உதவும்.