daughter, father odisha
daughter, father odisha PT
இந்தியா

தந்தையின் உயிரை காப்பாற்ற பாசப்போராட்டம்..35 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் வைத்து ஓட்டிச்சென்ற சிறுமி!

Jayashree A

ஒடிசாவில் தந்தையின் உயிரைக்காப்பாற்ற 14 வயது சிறுமி செய்த செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடல் நலக்குறைவாக இருந்த தனது தந்தையை கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் தூரத்தை தள்ளு வண்டியின் மூலம் தானே கூட்டிச்சென்று தந்தையை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்குழந்தைகளுக்கு தந்தையின் மீது அதிகமாகவே பாசம் இருக்கும் என்று கூறுவார்கள். ஒடிசாவில் நடந்துள்ள சம்பவம் தந்தை மீதான மகள்களின் பாசம் எவ்வளவு அழுத்தமானது எடுத்துக் காட்டியுள்ளது.

ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்புநாத். இவரது 14 வயது மகள் சுஜாதா சேத்தி. காயம் அடைந்த சாம்புநாத்தை அவரது மகள் சுஜாதா கடந்த 23ம் தேதி தனது கிராமத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாம்நகர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்று இருக்கிறார். இருப்பினும் அங்குள்ள மருத்துவர்கள் அவரை உடனடியாக பத்ரக் நகரில் இருக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த அந்த மருத்துவமனையானது கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஆனாலும் தனது தந்தை நலமுடன் இருக்கவேண்டும் என்று நினைத்துள்ளார் சுஜாதா சேத்தி. ஆனால் அந்த சம்பவம் அவரிடம் மொபைல் போன் போன்ற வசதி கூட இல்லை. வாகனம் ஏற்பாடு செய்யும் அளவிற்கு பண வசதியும் இல்லை. இருப்பினும் சற்றும் தாமதிக்காமல் தனது தந்தையை காப்பாற்றும் பொருட்டு அவரை தள்ளு வண்டியில் கிடத்தி 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டார்.

அங்கும் அந்த சிறுமிக்கு சோதனை காத்திருந்தது. சாம்புநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், “அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆதலால் ஒருவாரம் கழித்து மறுபடியும் சாம்புநாத்தை அழைத்து வாருங்கள்” என்று சுஜாதாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவு தூரம் வண்டியில் கால் வலிக்க மிதித்து தந்தையை அழைத்து வந்தநிலையில், உடனடியாக திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது அவருக்கு கவலை அளித்தது.

இருப்பினும், திரும்பவும் தனது தந்தையை தள்ளுவண்டியில் கிடத்தி வீட்டுக்கு திரும்பியுள்ளார். சிறுமி வீட்டிற்கு திரும்பு வழியில் பத்திரிக்கையாளர்கள் சிலர் அவரை பார்த்துள்ளனர். அவரை நிறுத்தி விவரத்தை கேட்டுள்ளனர். மருத்துவமனை தரப்பில் பேசி ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இத்தகவலறிந்து அத்தொகுதி எம்.எல்.ஏ அச்சிறுமியை அணுகி, சாம்புநாத் உடல் நலம் சரியாகும் வரையில் மருத்துவமனையிலேயே இருக்கவேண்டும் என்றும் அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கிட தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் இச்செயல் தந்தையின் மீதுள்ள பாசத்தை எடுத்துக் காட்டுகிறது. முன்னதாக, பீகாரில் சில நாட்களுக்கு முன்பு சம்பவம் ஒன்று நடந்து அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியது. பீகார் மாவட்டத்தில் தனது மனைவி 3 வதாக பெண் சிசுவை சுமக்கிறாள் என்று தெரிந்ததும் அவளை அடித்தே கொன்ற சம்பவமும் சிலநாட்களுக்கு முன் இந்தியாவில்தான் நடந்ததுள்ளது.