நொய்டா போராட்டம் ANI
இந்தியா

நொய்டா | சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்.. திடீரென வெடித்த வன்முறை!

நொய்டாவில் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

Premkumar S

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் நகரமாகும். இங்கு, மாருதி கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் முதல் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில், குறைந்தபட்ச சம்பளமாக தொழிலாளர்களுக்கு 11,313 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்டை மாநிலமான ஹரியானவில் தொழிலார்களுக்கு 35% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு இம்மாதம் (ஏப்ரல் 1) அமலாகியிருக்கிறது.

நொய்டா வன்முறை

நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தின், கிளை நிறுவனம் ஹரியானாவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி ஊதிய உயர்வு அதிகரித்திருக்கிறது. எனினும், நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை. இந்த இரு இடங்களுக்குமான சம்பள விகிதம் 3 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால், நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

இந்த சூழலில்தான், நேற்று சம்பள உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களுடன் பல்வேறு நிறுவனத்தின் தொழிலார்களும் சம்பள உயர்வு மற்றும் மோசமான பணிச்சூழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால், ஏரளமான போலீசார் அப்பகுதியில், குவிக்கப்பட்டிருந்தனர். நொய்டாவில் நடைபெற்ற போராட்டம் காசியாபாத்திற்கும் பரவியது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நொய்டா வன்முறை

இந்தப் போராட்டம் முதலில் அமைதியாகத் தொடங்கியது. ஆனால், பின்னர் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கற்கள் வீசியும், காவல்துறை வாகனங்கள் உட்பட வாகனங்களுக்கு தீயும் வைக்கப்பட்டது. நிறுவனங்களின் சொத்துக்களும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்து. போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீஸார் கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தினர். சுமார், 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொழிலாளர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 21% ஊதிய உயர்வை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அதன்படி, திறமையற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,690, அரை-திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059, திறன் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.16,868 என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றையும் யோகி அரசு அமைத்துள்ளது. இக்குழு தொழிலாளர்களின் பிற கோரிக்கைகளான, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, ஓவர் டைம் ஊதியம் போன்றவை ஆராய்ந்து அதற்கான அறிக்கையை மாநில அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், சம்பள உயர்வு போதாது எனக் கூறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் யோகி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நொய்டா சாலைகளில் நேற்று வெடித்த போராட்டம், புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் இறுதி அலறல்’ எனத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், இந்த வன்முறை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட வன்முறை என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல, உத்தரபிரதேச அமைச்சர் அனில் ராஜ்புர் அளித்த பேட்டியில், மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும், இந்த வன்முறையில் பாகிஸ்தானுக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.